இரண்டாம் நிலை கட்டுரை

தமிழர் தோற்றம் ⭐

தமிழர் தோற்றம் பற்றி 4 கருதுகோள்கள் உள்ளன. தமிழர் குமரிக்கண்டத்தில் இருந்து வந்தார்கள் என்பது ஒரு கருதுகோள்.பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது இன்னொரு கருதுகோள். மூன்றாவது கருதுகோள் தமிழர்கள் ஆதியில் ஆப்பிரிக்காவில் இருந்து அரேபிய கடல் ஊடாகத் தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்களே என்கிறது. தமிழர் நடு ஆசியா,வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படியாயினும் தமிழினம் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்றாகும்.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், குறிப்பாக ஆதிச்ச நல்லூரில், நடந்த அகழ்வாராய்ச்சியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புதையுண்ட மண்பாண்டங்கள் கிமு 1000-ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தவைகளாகும்.இவை தமிழர்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றாக விளங்குகின்றன. அப்புதைபொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இஃது உறுதி செய்கிறது. சமீபத்தில் இவ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துகள் குறைந்தது கி.மு 500-ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாகும். இதையும் சங்கத்தமிழ் இலக்கிய ஆதாரங்களையும் கொண்டு குமரிக்கண்டத்தில் இருந்து தமிழர் வந்தார்கள் என்று சிலர் கூறுவர்.

தமிழர்கள் மற்றும் திராவிடர்கள் பொதுவாக இணைக்கப்பட்டுள்ளனர் மற்றும் பண்டைய தெற்கு ஈரானில் உள்ள கற்கால சாக்குரோசு விவசாயிகளுடன் ஒரு பொதுவான தோற்றத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று பல ஆய்வுகள் முடிவு செய்கின்றன. இந்தக் கற்கால மேற்கு ஆசிய தொடர்பான குடிகள் அனைத்துத் தெற்காசியர்களின் முக்கிய மூதாதையரின் அங்கமாக அமைகிறது. அசுகோ பருபோலாவின் கூற்றுப்படி, புரோட்டோ-தமிழர்கள், மற்றத் திராவிடர்களைப் போலவே, சிந்து சமவெளி நாகரிகத்தின் வழித்தோன்றல்களாக உள்ளனர், இஃது எலாமியர்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது