முதல் நிலை கட்டுரை

பூம்புகார்

காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்), பண்டைய தமிழ் நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று. இது சோழ நாட்டைச் சேர்ந்தது. இந்நகரம் முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந்நகரம், காவேரிப்பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. காவிரிப்பட்டினம் குறித்த அகழாய்வு அறிக்கையை கே. வி. சௌந்தரராஜன் மற்றும் கே. வி. இராமன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். அந்த அறிக்கையின் படி இந்த நகரத்தின் காலகட்டம் 15 ஆயிரம் வருடத்திற்கு முற்பட்டது. இன்றும் அதன் பல்வேறு அடையாளங்கள் கடலுக்குள் இருக்கிறது. உலகில் அழிந்த பெருநகரங்களில் இதுவும் ஒன்று. கடற்கரை துறைமுகமாக விளங்கிய இதன் வணிக முக்கியத்துவம் காரணமாக, பல நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கே வந்தார்கள். அவர்களுக்கான குடியேற்றங்களும் இப்பட்டினத்தில் காணப்பட்டதாகச் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த இலக்கியங்கள் கூறுகின்றன.