தமிழர்கள் 2500 வருடங்களுக்கு மேலாக எழுத்து முறையைக் கையாண்டு வந்துள்ளார்கள்.
அசோக பிராமி எழுத்துக்கள்தான் இந்தியாவில் பழமையான எழுத்தாகக் கருதப்பட்டது. கீழடி அகழ்வாராய்ச்சியில் பல்வேறு பானை ஓடுகளில் தமிழி எழுத்துக்கள் கிடைக்கப் பெற்றன. இவைகள் அசோக பிராமிக்கு முந்தைய காலகட்ட எழுத்துக்கள் என நிறுவப்பட்டு விட்டது. இந்தியாவில் கிடைக்கப்பெற்ற மிகப் பழமையான எழுத்து தமிழர்களின் தமிழி எழுத்து எனத் தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டும்.
பானை ஓடுகளில் எழுதப்பட்டு இருப்பதால் எழுதும் பழக்கம் பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்தது என்பது தெளிவாகிறது.
நமக்குக் கிடைத்த இலக்கியங்கள் பெரும்பாலும் ஓலைச்சுவடிகளின் மூலம் வட்டெழுத்துக்களில் கிடைத்துள்ளது. தஞ்சை பெரிய கோயில் போன்ற பல்வேறு கோவில் கல்வெட்டுகளிலும் வட்டெழுத்து முறை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த 400 வருடங்களாக, அச்சு ஊடகத்தில் வட்ட எழுத்து வளர்ச்சி பெற்று, நவீன தமிழ் எழுத்து பிறந்தது. இதில் சீர்திருத்தத்திற்கு முன்பு இருந்த எழுத்து, பின்பு இருக்கும் எழுத்து என்று சிறு மாறுதலோடு, தற்போதைய நவீன எழுத்துத் தமிழர் பயன்பாட்டில் உள்ளது.
கடந்த 2500 ஆண்டுகளில் தமிழி, வட்டெழுத்து, நவீன தமிழ் எழுத்துகளாக மாற்றமடைந்து, தமிழ் வரிவடிவிலும் வாழ்கிறது.
தமிழில் 12 உயிரெழுத்துகளும் 18 மெய்யெழுத்துகளும் ஓர் ஆய்த எழுத்தும் 216 உயிர்மெய் எழுத்துகளுமாக மொத்தம் 247 எழுத்துகள் உள்ளன.
தமிழ் மொழி அல்லாத வடமொழி ஒலி வரும் சொற்களை எழுதக் கிரந்த எழுத்தை மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள்.
ஜ் | ஜ | ஜா | ஜி | ஜீ | ஜு | ஜூ | ஜெ | ஜே | ஜை | ஜொ | ஜோ | ஜௌ |
ஷ் | ஷ | ஷா | ஷி | ஷீ | ஷு | ஷூ | ஷெ | ஷே | ஷை | ஷொ | ஷோ | ஷௌ |
ஸ் | ஸ | ஸா | ஸி | ஸீ | ஸு | ஸூ | ஸெ | ஸே | ஸை | ஸொ | ஸோ | ஸௌ |
ஹ் | ஹ | ஹா | ஹி | ஹீ | ஹு | ஹூ | ஹெ | ஹே | ஹை | ஹொ | ஹோ | ஹௌ |
க்ஷ் | க்ஷ | க்ஷா | க்ஷி | க்ஷீ | க்ஷு | க்ஷூ | க்ஷெ | க்ஷே | க்ஷை | க்ஷொ | க்ஷோ | க்ஷெள |
இதுவும் தமிழர்களால் உருவாக்கப்பட்ட எழுத்து என்றாலும். இது தமிழ் மொழிக்கான எழுத்தல்ல. கிரந்த எழுத்துக்களின்றி எழுதுவதே தமிழ் மரபாகும்.