பாடநூல் பாடங்கள் கட்டுரை

பண்பாடு

பண்பாடு என்பது ஓர் இனத்தின் வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றைக் குறிக்கும். பண்பாடு எனும் சொல் \’பண்படு\’ என்ற சொல்லில் இருந்து தோன்றியது. பயிர் செய்வதற்கு ஏற்றவாறு செம்மைப்படுத்தப்பட்ட நிலம் பண்படுத்தப்பட்ட நிலமாகும். அதே போன்று பண்புநலனில் முதிர்ச்சி பெற்ற மாந்தரையும் பண்பட்ட மாந்தர் என்போம். நாகரிகம் பண்பாட்டின் உயர்வைக் காட்டும் கூறு. பண்பாடு என்பது பெரிதும் மாறாத் தன்மையுடையது. ஆயினும், காலவோட்டத்தில் மாற்றங்களுக்கு உட்படலாம். தொன்மைக் காலத்திலிருந்தே தமிழர் தம் பண்பாட்டைப் பேணி வாழ்கின்றனர். தமிழ் இலக்கியங்கள் தமிழர் பண்பாட்டை அறியப் பயன்படுகின்றன. இசை, ஆடல், நாடகம், சிற்பம், ஓவியம் ஆகிய நுண்கலைகளும் தமிழர் பண்பாட்டைச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. இதற்குச் சான்றுகளாகத் தமிழ் மன்னர்கள் கட்டிய கோவில்கள், கோபுரங்கள், செதுக்கிய சிலைகள், புகழ் பெற்ற ஓவியங்கள் என்பன உள்ளன. தம்மை நாடி வந்தோரை வரவேற்று விருந்தோம்புதல், ஒருவரை ஒருவர் காணும்போது வணக்கம் கூறல், நலம் கேட்டல், முதியோரைப் பேணல் போன்றன தமிழர் பண்பாட்டினுள் அடங்கும். மானம், வீரம், கொடை என்பன தமிழரின் தனித்தன்மையான பண்பாட்டு அடையாளங்கள். இந்தியா, ஈழம் மற்றும் மலேசியா, சிங்கப்பூர் உட்பட தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் அனைத்திலும் தமிழர் பண்பாடு வேரூன்றி உள்ளது. புலம்பெயர் தமிழர் தமது பண்பாட்டையும் மொழியையும் கலைகளையும் தாயகப் பிணைப்பின் ஊடாகப் பேணி வருகின்றனர்.

 

வினாக்களுக்கு விடை எழுதுக

 

  1. பண்பாட்டின் உயர்வைக் காட்டும் கூறு எது?
  2. தமிழர் பண்பாட்டை அறிய எவை பயன்படுகின்றன?
  3. நுண்கலைகள் எவை?
  4. தமிழரின் தனித்தன்மையான பண்பாட்டு அடையாளங்கள் எவை?
  5. தமிழர் வாழும் நாடுகளுள் நான்கு கூறுக.
  6. புலம்பெயர் தமிழர் தமது பண்பாட்டை எதனூடாகப் பேணி வருகின்றனர்?
  7. நீங்கள் பின்பற்றும் தமிழ்ப்பண்பாடுகள் யாவை?
  8. பண்புநலனில் முதிர்ச்சி பெற்ற மாந்தரை எப்படி அழைப்பர்?
  9. உங்களுக்கு மிகவும் பிடித்த தமிழர் பண்பாடு எது?
  10. வாழிட நாட்டுப் பண்பாட்டு முறைகள் இரண்டு கூறுக.
  11. தமிழரின் தனித்தன்மையான பண்பாட்டு அடையாளங்கள் எவை?
  12. தமிழர் வாழும் நாடுகளுள் நான்கினை எழுதுக.
  13. புலம்பெயர் தமிழர் தமது பண்பாட்டை எதனூடாகப் பேணி வருகின்றனர்?
  14. பண்பாடு என்பது எவற்றைக் குறிக்கிறது?
  15. தமிழரின் நுண்கலைகளுக்குச் சான்றாகஉள்ளவை எவை